"சூத்ராள் பூஜை பண்றது" (பாகம் - இரண்டு)
ஊர்ப்பெயர்கள் கடவுளர் பெயர்கள் வடமொழி மயப்படுத்தப்பட்டன!
ஞானசம்பந்தருக்கு அவரது 16 ஆவது அகவையில் திருமணம் நடந்தது. அவருடைய திருமணப் பந்தல் கொளுத்தப்பட்டது. அவர் தனது தந்தை சிவாபாதஇருதையர், மனைவி மற்றும் சுற்றத்தாரோடு பெருநல்லூர்க் கோயிலுக்குச் சென்று சோதியில் புகுந்ததை 'மருவிய பிறவி நீங்க மன்னு சோதியின் உள் புக்கார்" எனப் பெரிய புராணம் (பாடல் 1249) செப்புகிறது. கோயிலுக்குள் அவர்கள் நுளைந்தபோது சோதி ஒன்று தோன்றியது என்றும் அதில் அவர்கள் கலந்து மறைந்து விட்டார்களாம்.
ஞானசம்பந்தர் தன்னைச் செந்தமிழ்;வல்ல தமிழ்ஞானசம்பந்தன் என்று சொல்வதோடு நில்லாமல் தமிழ்மொழியை சங்கத் தமிழ், சங்கமலித் தமிழ் என வாய்க்கு வாய் போற்றிப் பாடியதோடு தமிழ்மொழி வழிபாட்டை எதிர்த்த பிராமணர்களை 'செந்தமிழ்ப் பயன் அறியாத மந்திகள்" எனக் கடுமையாகக் கண்டிக்கவும் செய்தார்.
ஞானசம்பந்தர் பிராமணனராக இருந்தும் அவர் தமிழைப் போற்றினார் வடமொழியை பின்தள்ளினார் என்ற வெப்பாரம் காரணமாகவே பிற்கால நந்தன் போல் அவர் உயிரோடு கொளுத்தப்பட்டார். அந்தக் கொலையை மறைக்கவே சோதியில் கலந்தார் என எழுதி வைத்தார்கள்.
திருஞானசம்பந்தர் பிறந்ததாகச் சொல்லப்படும் கவுணிய கோத்திரம் இன்று தமிழ்நாட்டிலோ அல்லது வேறெங்கிலுமோ இல்லை! இது அவரது சந்ததி பூண்டோடு அறுக்கப்பட்டதைக் காட்டுகிறது.
'பகவானுக்கே அபச்சாரம் பண்றேளே... ஆண்டாள் யாரு? மாணிக்கவாசகர் யாரு? ஆண்டாள் பிராட்டி பக்கத்துல அந்தச் சூத்திரன் மாணிக்கவாசகன் இருக்கலாமா? என்று மன்னார்குடி ராஜகோபால் தீட்சிதர் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் வெறுப்பை உமிழ்கிறார் என்றால் மாணிக்கவாசகரை விட பலபடி தமிழைப் போற்றிய தமிழ்ஞானசம்பந்தரை அவர் காலத்துப் பிராமணர்கள் இலகுவில் விட்டிருப்பார்களா?
இன்று கூட ஞானசம்பந்தர் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்கு எந்தப் பிராமணனும் வைப்பதில்லை. ஞானசம்பந்தர் என்ற பெயரை ஆதியிற் சைவ வேளாளர்களாயிருந்து பிராமண ஆசாரங்களைக் கற்றொழுகிப் பிராமணர்களென்று தங்களைக் கூறிக்கொள்ளும் குருக்கள்மார்களுக்குள் மட்டும் ஞானசம்பந்தர் என்ற பெயர் வழங்கி வருகிறது.
திருஞானசம்பந்தரது பெயரைத் தங்கள் குழந்தைகளுக்கு எந்தப் பிராமணனும் வைப்பதில்லை என்பது மட்டுமல்ல எஞ்சிய சமயகுரவர்களான திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் பெயர்களையும் பிராமணர்கள் வைப்பதில்லை! இன்றுகூட இந்த சமய குரவர் நால்வரும் நீச பாஷையான தமிழில் தேவார திருவாசகம் பாடி இறைவனை வழிபட்டார்கள் என்பதற்காகப் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
சென்ற நூற்றாண்டில் தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் பள்ளியெழுச்சி பாடிய மகாகவி பாரதியார் பிராமணர்களால் சாதிப் புறக்கணிப்புச் செய்யப்பட்டு அக்கிரகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். பட்டினியாலும் பசியாலும் மெலிந்த பாரதியார் தனது 39வது வயதிலே இயற்கை எய்தினார். யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடித் தனது பாட்டுத்திறத்தாலே இவ் வையத்தை பாலித்த அந்தக் கவிஞனது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர் தொகை எண்ணி 21 பேர்தான்!
ஞானசம்பந்தர் சூத்திரர் அல்லாவிட்டாலும் நான்மறை வேள்வி மல்கச் செய்தார் என்றாலும் வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க, பூதபரம்பரை பொலியப் பாடுபட்டார் என்றாலும் நீச பாஷையான தமிழில் பாடிவிட்டார் என்பதால் அவரைச் சூத்திரனாகவே மன்னார்க்குடி ராஜகோபல் போன்ற தீட்சதகர்கள் பார்க்கிறார்கள். சாதி வெறி பிடித்த ஆதி சங்கரர் சம்பந்தரை திராவிட சிசு என அழைத்தார். அதன் பொருள் ஞானசம்பந்தர் சூத்திரன் என்பதாகும்.
இந்தத் தமிழ்மொழி வெறுப்பென்பது அங்கிங்கின்னாத படி எங்கும் நிறைந்திருக்கிறது. மொன்றியிலில் ஒரு கோயில் கும்பாபிசேக அறிவித்தலைக் குடமுழுக்கென்று தூய தமிழில் போட்டதைக் கண்டு வெகுண்டெழுந்த குருக்கள் கும்பாபிசேகம் செய்ய மறுத்துவிட்டார்.இலங்கைத் தமிழரே இந்தத் தமிழ் எதிர்ப்பைப் பொறுத்தால் இந்தியத் தமிழர்களைக் குறை சொல்ல முடியுமா?
சைவமும் தமிழும் ஒன்று, சைவம் இன்றேல் தமிழ் இல்லை என்று ஈழத்தமிழர்கள் போடும் வாய்ப்பந்தலுக்கு எந்தக் குறையும் இல்லை! ஆனால் இங்குள்ள கோயில்களின் திருவிழா அறிவித்தல்களைப் (மஹேபங்சவ விஞ்ஞாபனம்) பார்த்தால் சைவத்தின் தமிழ்மொழி வெறுப்பும் வடமொழி விருப்பும் பளிச்செனத் தெரியும்!
இந்துக் கடவுளர்க்கு தமிழ் விளங்காது என்ற நினைப்பில் பூசை எல்லாம் வடமொழியில்தான் இடம்பெறுகிறது. ஆனால், முருகனுக்கும் தமிழ் விளங்காது என்று நினைப்பதுதான் ஏனென்று விளங்கவில்லை!
பிராமணர்களைப் பொறுத்தளவில் தேவார திருவாசகம் பண்டாரப் பாட்டுக்களாகும். அவற்றை ஓதும் பார்ப்பனர்களைப் பார்க்க முடியாது. எனவேதான் தேவார திருவாசம் ஓதுவதற்கு ஓதுவார் என்ற புதிய சாதி உருவாக்கப்பட்டது.
தேவார திருவாசகங்கள் திருமுறையில் சேர்க்கப்பட்டு, திருமுறைதான் சைவத்தின் பிரமாணம் என்று சைவர்கள் சிலர் உச்சி மீது வைத்து மெச்சினாலும், பிராமணர்களைப் பொறுத்தளவில் அவை பண்டாரப்பாட்டுக்கள்தான்!
தில்லை ஆடலரசன் கோயிலில் (சைவர்களின் தாய்க் கோயில்) திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம், சிவபுராணம் பாட யாரையும் தில்லைவாழ் தீட்சகர்கள் இன்றும் அனுமதிப்பதில்லை.
'மடிகட்டிக் கோயிலிலே
மேலுடை இடுப்பினிலே
வரிந்து கட்டிப்
பொடிகட்டி இல்லாது
பூசி யிருகைகட்டிப்
படிகட்டித் தமிழரெனப்
படிக்கட்டின் கீழ் நின்று
கொண்டுதானே உள்ளனர்?
என்ற இழிநிலை தமிழ்மொழிக்கு இந்தக் கணமும் நீடிக்கிறது!
தேவாரம் திருவாசகம் பாட எத்தனித்த ஓதுவார் வி.ஆறுமுகசாமியை தீட்சதகர்கள் நையப்புடைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்! கை கால்களுக்குப் பத்துப் போட்ட நிலையில் மருத்துவ மனையில் இருக்கும் அவரது புகைப்படங்கள் செய்தித்தாளில் வெளிவந்தன!
ஓதுவார் வி.ஆறுமுகசாமி சிதம்பரத்தைச் சேர்ந்தவர். சிதம்பரம் நடராசர் கோவில் திருச்சிற்றம்பலம் பல மேடையில் தேவாரம், திருவாசகம், சிவபுராணம் பாடுவதையே தனது வாழ்வின் இலக்காகக் கொண்டவர். மருத்துவமனையில் குணமாகி வந்து மீண்டும் கோயிலில் பாட அனுமதி கேட்டும் தில்லைத் தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை. வலியுறுத்திக் கேட்டபோது 'ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாள்பாள்" என்பது போல அவர் கோவிலுக்குள் நுழையவே தடை விதித்து விட்டனர்!
இதையடுத்து நீதி கேட்டு ஆறுமுகசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி டி.முருகேசன் எல்லா குடிமக்களைப் போல ஆறுமுகசாமி கோவிலுக்குள் செல்லலாம் என்று உத்தரவிட்டார்.
சைவத்தையும் தமிழையும் வளப்பவர்கள் யார்? இரண்டையும் அழிப்பவர்கள் யார்? தில்லைவாழ் தீட்சகர்களா அல்லது வேறுயாருமா?
நால்வர் பாடிய தேவார திருவாசகங்களைத் தில்லைக் கோயில் அறையில் பூட்டி வைத்துக் கறையானுக்கு இரையாக்கினவர்களும் இந்தத் தில்லைவாழ் தீட்சகர்கள்தான்! முதலாவது இராசராசன் சோழன், சூழ்ச்சியால் அழிந்தவவை போக எஞ்சியதை மீட்டான்.
இந்திய மொழிகளுக்கு எல்லாம் வடமொழியே தாய்மொழி என்று ஒரு காலத்தில் சொன்னார்கள். பக்திபோதை தலைக்கேறிய தமிழர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள். மொழி வல்லுனர் முனைவர் கால்டுவெல் அய்யர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற ஆய்வுநூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிடும் வரை இந்தப் படிமம் தமிழ் படித்த புலவர்கள், பண்டிதர்கள் உட்பட எல்லா மட்டத்திலும் இருந்தது.
கால்டுவெல் அய்யர் அயர்லாந்தில் மே 1814 இல் பிறந்தவர். இந்தியாவுக்கு 1838 ஆம் ஆண்டு சனவரி திங்கள் வந்தவர். மொத்தம் 54 ஆண்டுகள் சமயத் தொண்டும் தமிழ்த் தொண்டும் ஆற்றிய இப்பெரியார் 1892 இல் காலமானார். அவரது கல்லறை இன்றும் இடையன்குடித் தேவாலயத்திலே தமிழ்த் தொண்டின் சின்னமாக விளங்குகிறது.
வேதப் பிராமணர் தம் வெண்ணிறத்தையும தம் முன்னோர் மொழியின் ஆரவார ஒலியையும் தமிழரசர்களின் பேதைமைகளையும் கொடைமடத்தையும் மதப் பித்தத்தையும் அளவிறந்து பயன்படுத்திக் கொண்டு தம்மை நிலத்தேவராகவும் தம் முன்னோர் மொழியைத் தேவ பாடை என்றும் அவர்களை நம்பவைத்தனர். அதனால் தமிழ்மொழி திருக்கோயில் வழிபாட்டுக்கும் திருமணம் போன்ற சடங்குகளுக்கும் கொள்ளத்தக்க மொழி அல்ல எனத் தள்ளப்பட்டு வடமொழியே திருக்கோயில் வழிபாட்டு மொழியாகவும், சடங்கு மொழியாகவும் (காது குத்தல், வீடுகுடி புகுதல், திருமணம், திவசம் ....) பிராமணரால் ஆளப்பட்டு வருகிறது.
இவைகள்யாது ஒன்றும் புரியாத தமிழர்கள் தங்கள் தாய்மொழி இவ்வாறு இழிவுபடுத்தப்படுவதை இட்டுக் கொஞ்சம் கூடக் கவலைப்படாது இழிவையே பெருமையாகக் கருதி நடக்கின்றனர்.
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நடித்து 1943 இல் வெளிவந்த பிரபாவதி படத்தில் ஒரு காட்சி. அடிமைத்தனமும் மூடத்தனமும் கொடி கட்டிப் பறந்த காலம் அது.
படுத்திருக்கும் அசுரன் ஒருவன் தலையை கலைவாணர் காலால் மிதிப்பார்.
'ஏண்டா என்னை மிதிச்சே?" கோபத்தோடு கேட்பான் அசுரன்.
'இப்படித்தான் பகவான் வாமன அவதாரத்திலே மகாபலிச் சக்ரவர்த்தி தலைமீது காலை வச்சு மிதிச்சார்" என்பார் கலைவாணர்.
'பகவான் இப்படியா மிதிச்சார்? அப்ப நல்லா மிதி" என்று கூறித் தலையைக் காட்டுவான் அசுரன்.
தொடரும்......
