Sunday, March 26, 2006

"சூத்ராள் பூஜை பண்றது" (பாகம் - இரண்டு)

ஊர்ப்பெயர்கள் கடவுளர் பெயர்கள் வடமொழி மயப்படுத்தப்பட்டன!


ஞானசம்பந்தருக்கு அவரது 16 ஆவது அகவையில் திருமணம் நடந்தது. அவருடைய திருமணப் பந்தல் கொளுத்தப்பட்டது. அவர் தனது தந்தை சிவாபாதஇருதையர், மனைவி மற்றும் சுற்றத்தாரோடு பெருநல்லூர்க் கோயிலுக்குச் சென்று சோதியில் புகுந்ததை 'மருவிய பிறவி நீங்க மன்னு சோதியின் உள் புக்கார்" எனப் பெரிய புராணம் (பாடல் 1249) செப்புகிறது. கோயிலுக்குள் அவர்கள் நுளைந்தபோது சோதி ஒன்று தோன்றியது என்றும் அதில் அவர்கள் கலந்து மறைந்து விட்டார்களாம்.

ஞானசம்பந்தர் தன்னைச் செந்தமிழ்;வல்ல தமிழ்ஞானசம்பந்தன் என்று சொல்வதோடு நில்லாமல் தமிழ்மொழியை சங்கத் தமிழ், சங்கமலித் தமிழ் என வாய்க்கு வாய் போற்றிப் பாடியதோடு தமிழ்மொழி வழிபாட்டை எதிர்த்த பிராமணர்களை 'செந்தமிழ்ப் பயன் அறியாத மந்திகள்" எனக் கடுமையாகக் கண்டிக்கவும் செய்தார்.


ஞானசம்பந்தர் பிராமணனராக இருந்தும் அவர் தமிழைப் போற்றினார் வடமொழியை பின்தள்ளினார் என்ற வெப்பாரம் காரணமாகவே பிற்கால நந்தன் போல் அவர் உயிரோடு கொளுத்தப்பட்டார். அந்தக் கொலையை மறைக்கவே சோதியில் கலந்தார் என எழுதி வைத்தார்கள்.

திருஞானசம்பந்தர் பிறந்ததாகச் சொல்லப்படும் கவுணிய கோத்திரம் இன்று தமிழ்நாட்டிலோ அல்லது வேறெங்கிலுமோ இல்லை! இது அவரது சந்ததி பூண்டோடு அறுக்கப்பட்டதைக் காட்டுகிறது.

'பகவானுக்கே அபச்சாரம் பண்றேளே... ஆண்டாள் யாரு? மாணிக்கவாசகர் யாரு? ஆண்டாள் பிராட்டி பக்கத்துல அந்தச் சூத்திரன் மாணிக்கவாசகன் இருக்கலாமா? என்று மன்னார்குடி ராஜகோபால் தீட்சிதர் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் வெறுப்பை உமிழ்கிறார் என்றால் மாணிக்கவாசகரை விட பலபடி தமிழைப் போற்றிய தமிழ்ஞானசம்பந்தரை அவர் காலத்துப் பிராமணர்கள் இலகுவில் விட்டிருப்பார்களா?

இன்று கூட ஞானசம்பந்தர் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்கு எந்தப் பிராமணனும் வைப்பதில்லை. ஞானசம்பந்தர் என்ற பெயரை ஆதியிற் சைவ வேளாளர்களாயிருந்து பிராமண ஆசாரங்களைக் கற்றொழுகிப் பிராமணர்களென்று தங்களைக் கூறிக்கொள்ளும் குருக்கள்மார்களுக்குள் மட்டும் ஞானசம்பந்தர் என்ற பெயர் வழங்கி வருகிறது.

திருஞானசம்பந்தரது பெயரைத் தங்கள் குழந்தைகளுக்கு எந்தப் பிராமணனும் வைப்பதில்லை என்பது மட்டுமல்ல எஞ்சிய சமயகுரவர்களான திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் பெயர்களையும் பிராமணர்கள் வைப்பதில்லை! இன்றுகூட இந்த சமய குரவர் நால்வரும் நீச பாஷையான தமிழில் தேவார திருவாசகம் பாடி இறைவனை வழிபட்டார்கள் என்பதற்காகப் புறக்கணிக்கப்படுகிறார்கள்.


சென்ற நூற்றாண்டில் தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் பள்ளியெழுச்சி பாடிய மகாகவி பாரதியார் பிராமணர்களால் சாதிப் புறக்கணிப்புச் செய்யப்பட்டு அக்கிரகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். பட்டினியாலும் பசியாலும் மெலிந்த பாரதியார் தனது 39வது வயதிலே இயற்கை எய்தினார். யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடித் தனது பாட்டுத்திறத்தாலே இவ் வையத்தை பாலித்த அந்தக் கவிஞனது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர் தொகை எண்ணி 21 பேர்தான்!


ஞானசம்பந்தர் சூத்திரர் அல்லாவிட்டாலும் நான்மறை வேள்வி மல்கச் செய்தார் என்றாலும் வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க, பூதபரம்பரை பொலியப் பாடுபட்டார் என்றாலும் நீச பாஷையான தமிழில் பாடிவிட்டார் என்பதால் அவரைச் சூத்திரனாகவே மன்னார்க்குடி ராஜகோபல் போன்ற தீட்சதகர்கள் பார்க்கிறார்கள். சாதி வெறி பிடித்த ஆதி சங்கரர் சம்பந்தரை திராவிட சிசு என அழைத்தார். அதன் பொருள் ஞானசம்பந்தர் சூத்திரன் என்பதாகும்.


இந்தத் தமிழ்மொழி வெறுப்பென்பது அங்கிங்கின்னாத படி எங்கும் நிறைந்திருக்கிறது. மொன்றியிலில் ஒரு கோயில் கும்பாபிசேக அறிவித்தலைக் குடமுழுக்கென்று தூய தமிழில் போட்டதைக் கண்டு வெகுண்டெழுந்த குருக்கள் கும்பாபிசேகம் செய்ய மறுத்துவிட்டார்.இலங்கைத் தமிழரே இந்தத் தமிழ் எதிர்ப்பைப் பொறுத்தால் இந்தியத் தமிழர்களைக் குறை சொல்ல முடியுமா?

சைவமும் தமிழும் ஒன்று, சைவம் இன்றேல் தமிழ் இல்லை என்று ஈழத்தமிழர்கள் போடும் வாய்ப்பந்தலுக்கு எந்தக் குறையும் இல்லை! ஆனால் இங்குள்ள கோயில்களின் திருவிழா அறிவித்தல்களைப் (மஹேபங்சவ விஞ்ஞாபனம்) பார்த்தால் சைவத்தின் தமிழ்மொழி வெறுப்பும் வடமொழி விருப்பும் பளிச்செனத் தெரியும்!


இந்துக் கடவுளர்க்கு தமிழ் விளங்காது என்ற நினைப்பில் பூசை எல்லாம் வடமொழியில்தான் இடம்பெறுகிறது. ஆனால், முருகனுக்கும் தமிழ் விளங்காது என்று நினைப்பதுதான் ஏனென்று விளங்கவில்லை!


பிராமணர்களைப் பொறுத்தளவில் தேவார திருவாசகம் பண்டாரப் பாட்டுக்களாகும். அவற்றை ஓதும் பார்ப்பனர்களைப் பார்க்க முடியாது. எனவேதான் தேவார திருவாசம் ஓதுவதற்கு ஓதுவார் என்ற புதிய சாதி உருவாக்கப்பட்டது.

தேவார திருவாசகங்கள் திருமுறையில் சேர்க்கப்பட்டு, திருமுறைதான் சைவத்தின் பிரமாணம் என்று சைவர்கள் சிலர் உச்சி மீது வைத்து மெச்சினாலும், பிராமணர்களைப் பொறுத்தளவில் அவை பண்டாரப்பாட்டுக்கள்தான்!

தில்லை ஆடலரசன் கோயிலில் (சைவர்களின் தாய்க் கோயில்) திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம், சிவபுராணம் பாட யாரையும் தில்லைவாழ் தீட்சகர்கள் இன்றும் அனுமதிப்பதில்லை.

'மடிகட்டிக் கோயிலிலே
மேலுடை இடுப்பினிலே
வரிந்து கட்டிப்
பொடிகட்டி இல்லாது
பூசி யிருகைகட்டிப்
படிகட்டித் தமிழரெனப்
படிக்கட்டின் கீழ் நின்று
கொண்டுதானே உள்ளனர்?

என்ற இழிநிலை தமிழ்மொழிக்கு இந்தக் கணமும் நீடிக்கிறது!

தேவாரம் திருவாசகம் பாட எத்தனித்த ஓதுவார் வி.ஆறுமுகசாமியை தீட்சதகர்கள் நையப்புடைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்! கை கால்களுக்குப் பத்துப் போட்ட நிலையில் மருத்துவ மனையில் இருக்கும் அவரது புகைப்படங்கள் செய்தித்தாளில் வெளிவந்தன!

ஓதுவார் வி.ஆறுமுகசாமி சிதம்பரத்தைச் சேர்ந்தவர். சிதம்பரம் நடராசர் கோவில் திருச்சிற்றம்பலம் பல மேடையில் தேவாரம், திருவாசகம், சிவபுராணம் பாடுவதையே தனது வாழ்வின் இலக்காகக் கொண்டவர். மருத்துவமனையில் குணமாகி வந்து மீண்டும் கோயிலில் பாட அனுமதி கேட்டும் தில்லைத் தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை. வலியுறுத்திக் கேட்டபோது 'ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாள்பாள்" என்பது போல அவர் கோவிலுக்குள் நுழையவே தடை விதித்து விட்டனர்!

இதையடுத்து நீதி கேட்டு ஆறுமுகசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி டி.முருகேசன் எல்லா குடிமக்களைப் போல ஆறுமுகசாமி கோவிலுக்குள் செல்லலாம் என்று உத்தரவிட்டார்.

சைவத்தையும் தமிழையும் வளப்பவர்கள் யார்? இரண்டையும் அழிப்பவர்கள் யார்? தில்லைவாழ் தீட்சகர்களா அல்லது வேறுயாருமா?

நால்வர் பாடிய தேவார திருவாசகங்களைத் தில்லைக் கோயில் அறையில் பூட்டி வைத்துக் கறையானுக்கு இரையாக்கினவர்களும் இந்தத் தில்லைவாழ் தீட்சகர்கள்தான்! முதலாவது இராசராசன் சோழன், சூழ்ச்சியால் அழிந்தவவை போக எஞ்சியதை மீட்டான்.


இந்திய மொழிகளுக்கு எல்லாம் வடமொழியே தாய்மொழி என்று ஒரு காலத்தில் சொன்னார்கள். பக்திபோதை தலைக்கேறிய தமிழர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள். மொழி வல்லுனர் முனைவர் கால்டுவெல் அய்யர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற ஆய்வுநூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிடும் வரை இந்தப் படிமம் தமிழ் படித்த புலவர்கள், பண்டிதர்கள் உட்பட எல்லா மட்டத்திலும் இருந்தது.


கால்டுவெல் அய்யர் அயர்லாந்தில் மே 1814 இல் பிறந்தவர். இந்தியாவுக்கு 1838 ஆம் ஆண்டு சனவரி திங்கள் வந்தவர். மொத்தம் 54 ஆண்டுகள் சமயத் தொண்டும் தமிழ்த் தொண்டும் ஆற்றிய இப்பெரியார் 1892 இல் காலமானார். அவரது கல்லறை இன்றும் இடையன்குடித் தேவாலயத்திலே தமிழ்த் தொண்டின் சின்னமாக விளங்குகிறது.

வேதப் பிராமணர் தம் வெண்ணிறத்தையும தம் முன்னோர் மொழியின் ஆரவார ஒலியையும் தமிழரசர்களின் பேதைமைகளையும் கொடைமடத்தையும் மதப் பித்தத்தையும் அளவிறந்து பயன்படுத்திக் கொண்டு தம்மை நிலத்தேவராகவும் தம் முன்னோர் மொழியைத் தேவ பாடை என்றும் அவர்களை நம்பவைத்தனர். அதனால் தமிழ்மொழி திருக்கோயில் வழிபாட்டுக்கும் திருமணம் போன்ற சடங்குகளுக்கும் கொள்ளத்தக்க மொழி அல்ல எனத் தள்ளப்பட்டு வடமொழியே திருக்கோயில் வழிபாட்டு மொழியாகவும், சடங்கு மொழியாகவும் (காது குத்தல், வீடுகுடி புகுதல், திருமணம், திவசம் ....) பிராமணரால் ஆளப்பட்டு வருகிறது.

இவைகள்யாது ஒன்றும் புரியாத தமிழர்கள் தங்கள் தாய்மொழி இவ்வாறு இழிவுபடுத்தப்படுவதை இட்டுக் கொஞ்சம் கூடக் கவலைப்படாது இழிவையே பெருமையாகக் கருதி நடக்கின்றனர்.

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நடித்து 1943 இல் வெளிவந்த பிரபாவதி படத்தில் ஒரு காட்சி. அடிமைத்தனமும் மூடத்தனமும் கொடி கட்டிப் பறந்த காலம் அது.

படுத்திருக்கும் அசுரன் ஒருவன் தலையை கலைவாணர் காலால் மிதிப்பார்.

'ஏண்டா என்னை மிதிச்சே?" கோபத்தோடு கேட்பான் அசுரன்.

'இப்படித்தான் பகவான் வாமன அவதாரத்திலே மகாபலிச் சக்ரவர்த்தி தலைமீது காலை வச்சு மிதிச்சார்" என்பார் கலைவாணர்.

'பகவான் இப்படியா மிதிச்சார்? அப்ப நல்லா மிதி" என்று கூறித் தலையைக் காட்டுவான் அசுரன்.

தொடரும்......

"சூத்ராள் பூஜை பண்றது"

நேற்று இதை படித்தவுடன் இங்கு கொட்டிவிடவேண்டும்
என நினைத்து அதை செய்துள்ளேன்.

தமிழர்களது பெயர், ஊர்ப்பெயர், கடவுள் பெயரைக் கூட பிராமணர்கள்
வடமொழி மயப்படுத்தினார்கள்.

மறைக்காடு - வேதாரண்யம்
நாவலம்பொழில் - ஜம்புதீவு
புளியங்காடு - திண்டிவனம்
பெருவுடையார் - பிரகதீஸ்வரர்
பிறவிமருந்திறைவர் - பவஒளஷதீஸ்வரர்
ஐயாற்றார் - பஞ்சநதீஸ்வரர்
பற்றிடங்கொண்டார் - வான்மீகநாதர்
கூடுதுறையார் - சங்கமேஸ்வரர்
தடங்கண்ணி - விசாலாட்சி
மாதொருபாகன் - அர்த்தநாரீஸ்வரர்
கீரிமலை - நகுலேஸ்வரம்
குரங்காடுதுறை - பித்தலம்
பழமலை, திருமுதுகுன்றம் - விருத்தாசலம்
திருநெய்ததானம் - தில்லை ஸ்தானம்
திருவுச்சி - சிவகிரி
புள்ளிருக்குவேளுர் - வைத்திருசுவரன் கோயில்
திருநாணா - பவானி
திருநல்லம் - கோனேரிராசபுரம்
தில்லை - சிதம்பரம்
மயிலாடுதுறை - மாயுூரம், மாயவரம்
திருப்பருப்பதம் - சிறீசைலம்
திருச்சுற்று - பிரகாரம்
திருமுற்றம் - சாந்தி
கருவுண்ணாழி - கற்பக்கிரகம்
பல்குடுக்கை நன்கணியார் - பக்குடுக்கச் சாயனா
இடகலை - இடா
பிங்கலை - பிங்களா
சுழிமுனை - சூட்சுமானா

சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது!

இடைக்காலத்தில் இருவேறு கருத்துக்கள் தோன்றி வளரலாயின. ஒன்று ஒருவன் அறிஞனாக இருந்தால் அவன் பார்ப்பன குலத்தவனாக இருக்க வேண்டும். மற்றொன்று தமிழில் நூல் செய்தால், அது வடமொழியில் இருந்து மொழிபெயர்த்ததாகவோ அல்லது தழுவலாகவோ இருக்கவேண்டும்.

தொல்காப்பியம் எமக்கு இன்று கிடைத்துள்ள நூல்களில் காலத்தால் முந்தியது என்பதை எல்லாத் தமிழறிஞர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதுமட்டும் அல்லாது தொல்காப்பியம் நீர்மையும் தண்மையும் வண்மையும் தொன்மையும் நிறைந்த தமிழ்மொழியின் எழுத்துச் சொல் இலக்கணத்தையும் தமிழ்மக்களின் வாழ்வியல் இலண்கணத்தையும் (பொருள்) விளக்கும் சிறந்த நூல் ஆகும். மொழி, வாழ்வு இரண்டையும் இணைத்து இலக்கணம் சொன்ன சிறப்பு தொல்காப்பியத்துக்கு மட்டுமே உண்டு.

எழுத்ததிகாரம் ஒலி அளவு, உயிர், மெய் என்ற பிரிவுகள், குறில், நெடில். வல்லினம், மெல்லினம், இடையினம், குற்றியலுகரம், குற்றியலிகரம், மொழிமரபு, புணரியல் போன்றவற்றுக்கு இலக்கணம் சொல்கிறது.

சொல்லதிகாரத்தில் தமிழ்ச் சொல்லின் சிறப்பும் திணை பால் முதலிய உயிர்ப்புகுப்பு உயிரியல் பகுப்பு முறையும் கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, ஒவ்வொரு சொல்லும் பொருள் குறித்துக் காரணத்தோடு அமைக்கப்பட்டுள்ளன என்பவற்றை விளக்கிக் கூறுகிறது.

பொருளதிகாரம் நிலம் பொழுது, கருப்பொருள், உரிப்பொருள், அகத்திணை, புறத்திணை, களவியல், கற்பியல், பாவின் பண்பு, மெய்ப்பாடு, உவமயியல், மரபியல் பற்றிச் சொல்கிறது.

இவ்வளவு சீரும் சிறப்பும் நிறைந்த நூலைத் தமிழ்ப் புலவர் ஒருவர் இயற்றி இருப்பாரா? ஒருக்காலும் இருக்காதே! இருக்க முடியாதே! பின் தொல்காப்பியர் எழுதாவிட்டால் யார் அதனை இயற்றி இருப்பார்?
தொல்காப்பியத்தை எழுதியவர் தொல்காப்பியர் அன்று, அதை எழுதியவர் திரணதூமாக்கினி என்பவர், அவரது தந்தையார் பெயர் சமதக்கினி. அதாவது நூலாசிரியர் ஒரு ஆரிய முனிவர்! வடமொழியில் பாணினி எழுதிய பாணினியமே தொல்காப்பியத்துக்கு வழி நூல்.!

தொல்காப்பியர் வரலாறு போலவே திருக்குறளை எழுதிய திருவள்ளுவரது புகழைக் கண்டு மனம் புழுங்கியவர்கள் முதல் குறளில் உள்ள ஆதிபகவன் என்னும் தொடரைப் பயன்படுத்தி திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதே சமயத்தில் ஓர் இழிகுலத்தவராகவும் காட்டல் வேண்டிக் கட்டுக் கதைகள் கட்டிவிட்டனர்.

திருவள்ளுவர் யாளிதத்தன் என்ற பிராமணனுக்கும் சண்டாளப் பெண்ணுக்கும் பிறந்ததாக ஞானாமிர்தம் (6 ஆம் நூற்றாண்டு) தெரிவிக்கிறது. அதற்குப் பிந்திய கபிலர் அகவல் 'அருந்தவ முனியும் பகவற்குப் பருவுூர்ப் பெரும் பதிக்கட் பெரும்புலைச்சி ஆதி வயிற்றினில்" பிறந்தார் என்றும் அவரது பெற்றோர் தங்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளைப் பிறந்த இடத்திலேயே விட்டு விட்டுப் போய்விடுவதால் 'தொண்டை மண்டலத்தில் வண்தமி;ழ் மயிலைப் பறையரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தார்" எனக் கூறுகிறது.

மேலும் திருவள்ளுவரையும் திருக்குறளையும் இழித்துப் பழிக்கும் முகமாக திருக்குறள் அறத்துப் பால் இராமாயணம், மகாபாரதம், பராசர சம்கிதை, பாகவதம், இருக்கு வேதம், மனு ஸ்மிருதி போன்ற சாத்திரங்களைத் தழுவியது என்றும் பொருட்பால் சாணக்கியன் இயற்றிய அர்த்த சாஸ்திரம், காமந்தக நீதி, சுக்கிர நீதி, போதாயன ஸ்மிருதி ஆகியவற்றில் இருந்து கடன் வாங்கப்பட்டதென்றும் காமத்துப்பால் வாத்ஸ்யாயனார் வடமொழியில் இயற்றிய காமசூத்திரத்தின் தழுவல் என்றும் வடமொழிப் பற்றாளர்கள் பகர்கிறார்கள்.

வாதஸ்யாயனார் கூறும் பிறன்மனை நயத்தலை திருவள்ளுவர் அறத்துப் பாலில் கண்டிக்கிறார். அப்படியிருக்க வள்ளுவரின் காமப் பால் காமசூத்திரத்தில் இருந்து எப்படி வந்திருக்க முடியும்?

திருக்குறளில் வலியுறுத்தப்படும் அறம் என்ற சொல்லுக்கு விளக்கம் கூற வந்த பரிமேலழகர் தனது உரைப் பாயிரத்தில் 'அவற்றுள் அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியது ஒழித்தலும் ஆம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.

அவற்றுள், ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார், தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்ற, அவற்றிற்கு ஓதிய அறங்களில் வழுவாது ஒழுகுதல்" எனப் பாலில் நஞ்சு கலப்பது போன்று ஆரிய நச்சுக் கருத்துக்களை முதலும் இடையும் முடிவுமாகப் புகுத்தி தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு விளைவித்துள்ளார். திருக்குறளை ஊன்றிப் படிப்பவர்களுக்கு இந்த உண்மை புலப்படும்.

இவ்வாறு தமிழில் ஒன்றுமில்லை அது சூத்திராள் பேசும் நீச பாஷை வடமொழியே நிலத் தேவர் பேசும் தேவ பாஷை என்பது 'அவாள்" மத்தியில் நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது. இலக்கணம் என்ற சொல் லஷணத்தில் இருந்து வந்தது என்று சொல்லாடல் புரிவதற்கு இந்தத் திமிர்ப்போக்கே முக்கிய காரணி ஆகும்.

'காஞ்சிகாமகோடி பீடாதிபதியாக இருந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த ஆதீனங்களை ஒன்றுபடுத்தி ஒரு பொதுவான சமய அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டார். திருவாவடுதுறை ஆதீனத்துக்கு ஏகப்பட்ட சொத்துகள் இருந்தது. அது போலவே மற்ற ஆதீனங்களுக்கும் வருவாய் இனங்கள் உண்டு. ஆதீனங்களின் வருவாயில் 5 விழுக்காட்டைப் பயன்படுத்தி ஆன்மீகப் பரப்புரை செய்ய வேண்டும் என்பது திட்டம்.

சொன்னபடி மடங்கள் தங்களது வருவாயில் 5 விழுக்காடு பங்கைக் கொடுக்க முன்வரவில்லை. ஆனால் கூட்டம் மட்டும் நடந்தபடி இருந்தது. அதில் மதுரை பெரிய ஆதீனம் ஒரு பிரச்சினையைக் கிளப்பினார்.

'கோவில்களைக் கட்டியது தமிழ் மன்னர்கள், அதற்கு உதவி செய்தது, உழைப்புக் கொடுத்தது, வியர்வை கொடுத்தது, வீர்யம் கொடுத்தது, கல் சுமந்தது, மண் சுமந்தது எல்லாம் பிராமணர்களா? கல்சுமந்து மண் சுமந்து கோவில் கட்டியவனுக்குச் சாமியைச் சுமக்க, பூசை செய்யத் தடையா?

வடநாட்டில், குறிப்பாக காசியில், கோயிலுக்கு வருகிறவர்கள் எல்லாம் அவரவர் பூசை செய்து போகிறார்கள். அதுபோல இங்கேயும் அனைவரும் பூசை செய்யவேண்டும். மடங்களுக்கான அமைப்பு அதற்கு முன் முயற்சி எடுக்கவேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடைபெறவேண்டும் அதற்கு இந்த அமைப்பு உதவவேண்டும்" என்றெல்லாம் மதுரை ஆதீனம் புதிய கருத்துக்களைப் பேசினார்.

சொன்னதோடு இல்லாமல், தஞ்சாவூர் ஜில்லாவில், கும்பகோணம் சுவாமிமலை இடையே இருக்கிற திருப்புறம்பியம் கோயிலில் குடி கொண்டுள்ள சிவனைப் போலவே வேறொரு விக்ரகத்தைக் கோயிலுக்கு வெளியே வைத்து அதை அனைவரும் பூசிக்க ஏற்பாடும் செய்தார்.

இது மடங்களுக்கான அமைப்பில் சலசலப்பை உண்டு பண்ணியது. ஏற்கெனவே நிதியாதாரம் இல்லாமல் நடைபோட்ட அமைப்பில் மதுரை ஆதீனத்தின் கருத்தை மகாபெரியவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

'சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது" என்றார் மகா பெரியவர். (அக்னிகோத்திரம் ராமனுஜதாத்தாச்சாரியார் எழுதும் 'இந்து மதம் எங்கே போகிறது?" - நக்கீரன் 30-03௨005)

இந்தச் சூத்திராள் வெறுப்பும் தமிழ் வெறுப்பும் வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க, புூதபரம்பரை பொலிய" வந்துதித்த ஞானசம்பந்தர், நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவைகலந்து, ஊன்கலந்து, உயிர்கலந்து தித்திக்கும் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் போன்ற பிராமணர்கள் மீதும் உமிழப்பட்டது.

மன்னார்குடியில் காஞ்சி சங்கராச்சாரியாரின் தூண்டுதலின் பெயரில் பாவை (திருவெம்பாவை, திருப்பாவை) மாநாடு நடத்தப்பட்டது. வைணவத்தையும் சைவத்தையும் இணைப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். மாநாடு மேடையில் ஆண்டாள் மாணிக்கவாசகர் சிலைகள் பக்கம் பக்கமாகப் போடப்பட்டிருந்தன. வைணவமும், சைவமும் பக்கத்துப் பக்கத்தில் இருப்பதைப் பார்த்து சிலரது கண்கள் அனல் கக்கின. அந்த அனலை அடக்க முடியாமல் மன்னார்குடி ராஜகோபால் தீட்சிதர் அக்னிகோத்திரம் ராமனுஜதாத்தாச்சாரியாரிடம் ஓடினார்.

'ஸ்வாமி.. என்ன இப்படிப் பண்ணிட்டேள்?" என மொட்டையாக ஆரம்பித்தார்.

'எதை எப்படிப் பண்ணிட்டேன்? விவரமா சொல்லுங்கோ" என நான் பதில் உரைத்தேன்.

'தெரிஞ்சுண்டே கேக்கறேளா?" மறுபடியும் மொட்டை மொழிகளையே பேசினார் ராஜகோபால் தீட்சிதர்.

'தீட்சிதரே.. என்ன சொல்றீர்? நீர் கேக்கறது எனக்கு முன்கூட்டியே தெரியறதுக்கு நான் என்ன பகவானா?"

தீட்சிதர் அப்போதுதான் தன் உள்ளக் கிடக்கையை உடைத்தார்.

பகவானுக்கே அபச்சாரம் பண்றேளே... ஆண்டாள் யாரு? மாணிக்கவாசகர் யாரு? ஆண்டாள் பிராட்டி பக்கத்துல அந்தச் சூத்திரன் மாணிக்கவாசகன் இருக்கலாமா? இது பகவானுக்கே பாவம் பண்ற மாதிரி ஆகாதா? அந்தச் சங்கராச்சாரி சொன்னா நீர் கேக்கணுமா? '(இந்துமதம் எங்கே போகிறது?"- அதிகாரம் 27)

ஆண்டாள் பிராட்டி பக்கத்துல அந்தச் சூத்திரன் மாணிக்கவாசகர் இருக்கலாமா? என தீட்சகர் ஏன் எரிந்து விழ வேண்டும்? அதன் பின்புலத்தில் ஒரு நீண்ட வரலாறே இருக்கிறது.

ஞானசம்பந்தர் சீர்காழியில் கவுணிய கோத்திரத்தில் பிறந்த பிராமணர். தமிழ்நாட்டில் பவுத்தத்தையும் சமணத்தையும் அழித்தொழித்தவர். அதற்கு அவர் கையில் ஏந்திய ஆயுதம் தமிழ் ஆகும்.

சைவத்தோடு தமிழை இணைத்துக் கொண்ட சம்பந்தர் தன்னைத் தமிழ் ஞானசம்பந்தன், முத்தமிழ் ஞானசம்பந்தன், செந்தமிழ்வல்ல ஞானசம்பந்தன், சீரார்தமிழ் ஞானசம்பந்தன், தமிழ்விரகன், தமிழ்கெழு விரகினன், என்று பலவாறு பலமுறை கூறிக் கொண்டார்.
(அதாவது இங்கு திரு.டொன்டு செய்வது போல)

ஞானசம்பந்தர் பாடிய 383 பதிகங்கள் ஒவ்வொன்றிலும் 11 பாடல்கள் இருக்கும். இந்தப் பாடல்கள் பெரும்பாலும் ஒரு சீரான வரிசையில் இருக்கும். எட்டாவது பாடல் கயிலைமலை எடுத்த வாளரக்கன் (இராவணன்) பற்றியதாக இருக்கும். ஒன்பதாவது பாடல் பிரமனும் விட்டுணுவும் தேடியும் அடிமுடி காணாத சிவனைப் போற்றிப் பாடியதாக இருக்கும்.

பத்தாவது பாடல் புறச் சமயங்களான பவுத்தம் (பொதியர்கள்) சமணம் (பிண்டியர்கள்) இரண்டையும் சாடுவதாக இருக்கும். கடைசிப் பாடல் சம்பந்தரே தன்னைத் தமிழ் ஞானசம்பந்தன், முத்தமிழ் ஞானசம்பந்தன், நான்மறை ஞானசம்பந்தன், முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன், மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் என அழைத்துத் தன் தமிழ்செய் மாலை செப்பவல்லார்கள் அறவன் கழல் சேர்வார், பாவம் கெடும், நற்கதி அடைவார்கள் எனப் பாடுவார்.

தமிழ்மொழிக்கு சங்கத்தமிழ், சங்கமலித் தமிழ் என நூற்றுக்கணக்கான அடைகளைத் தமது தேவாரப் பதிகங்களில் பதிவு செய்துள்ளார்.

சமயகுரவர்களில் ஒருவரான சுந்தரர் 'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்குலகவர் முன் தாளம் ஈந்தவன் பாடலுக்கு இரங்கும் தன்மை யாளனை" என சம்பந்தரைச் சிறப்பிக்கிறார். தமிழிசை கேட்கும் ஆவலால் சிவன் ஞானசம்பந்தருக்கு பொற்தாளம் கொடுத்தான் என்கிறார்.

பிற்காலச் சான்றோர்களும் மூவர் தமிழைப் பாராட்டி இருக்கிறார்கள்.

'தேவரெல்லாம் தொழச்சிவந்த செந்தாள் முக்கண்
செங்கரும்பே! மொழிக்குமொழி தித்திப்பாக
மூவர்சொலும் தமிழ்கேட்கும் திருச்செவிக்கே
மூடனேன் புலம்பிய சொல் முற்றுமோதான்"
எனத் தாயுமானவர் பாடுகிறார்.

பிராமணரான ஞானசம்பந்தன் நீச பாசையான தமிழைப் புகழலாமோ? போற்றலாமோ? கூடாதே, அடாதே, பாவமாச்சே என ஞானசம்பந்தருக்கு எதிராகப் பிராமணர்கள் போர்க்கொடி தூக்கினார்கள்

தொடரும்......

Tuesday, March 21, 2006

"ஒன்றிருந்தால் ஒன்றில்லை"

எல்லோரும் நம்பும்படி
சொல்லும் திறனிருந்தால்
சொல்லிலே உண்மை இல்லை

உள்ளதை உள்ளபடி
சொல்லும் மனிதனிடம்
உணர்ந்திடும் திறமையில்லை

உண்மையும் நம்பவைக்கும்
திறனும் அமைந்திருந்தால்
உலகம் அதை ஏற்பதில்லை

அது இருந்தால் இது இல்லை
இது இருந்தால் அது இல்லை

அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்
அவனுக்கிங்கே இடமில்லை

Thursday, March 16, 2006

"மூடர்களின் தலைகளிலே

பாடுபட்ட காத்த நாடு கெட்டுப் போகுது
கேடுகெட்ட கும்பலாலே-நீங்க
கேடுகெட்ட கும்பலாலே....

சூடுபட்ட மடமை (சாதி) கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே-பெரும்....சூடுபட்ட
வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து
வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே

வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு
வாழ இடமிருக்கு மண் மேலே-இன்னும்
வாழ இடமிருக்கு மண் மேலே-நாம்....
சூடுபட்ட மடமை,கூடுகட்டி வாழுது தீண்டாமை
கூடுகட்டி வாழுது மூடர்களின் தலைகளிலே...

Wednesday, March 15, 2006

"திருட்டு நரிகள்"

ஒற்றுமையில் ஓங்கிநின்ற சக்தியாலே-மக்கள்
உள்ளமெல்லாம் பொங்குதடா வெள்ளம்போலே
வெற்றியெனும் மேடையிலே அன்புக்காளை....
வீரநடை போடுதடா இந்தவேளை....


அன்பிருக்குது அறிவிருக்குது
பண்பிருக்குது பாரிலே...
அதை அழிக்க எண்ணித்
திருட்டு நரிகள் குழிபறிக்குது வேரிலே...


மாமறவர் வழியில் பிறந்து சிறந்து
மகாவீரன் தமிழன் மட்டும் என முழங்குவேன்!!!
வெற்றி வீரம் முழங்குவேன்!!!!!!
வெற்றி வீரம் முழங்குவேன்!!!!!!

Monday, March 13, 2006

"வந்தவழி சென்றிடலாம்"

காப்பி ஒண்ணு எட்டணா,
கார்டு சைசு பத்தணா!
காணவெகு ஜோராயிருக்கும்
காமிராவைத் தட்டினா!

பிள்ளைக்குட்டி கூட நின்னு
பெரிதாகவும் எடுக்கலாம்
பிரியம்போல காசு பணம்
சலிசாகவும் கொடுக்கலாம்
மல்லுக்கட்டி அழைக்கவில்லை,
மனமிருந்தால் வந்திடலாம்,

வயிறெரிந்த பேர்வழிங்க
வந்தவழி சென்றிடலாம்
தமிழன் தவிர எல்லோரும்
வந்தவழி சென்றிடலாம்

Sunday, March 12, 2006

"அவனே தமிழன்"

உறுப்பு அறுந்து போனாலும்
உள்ளம் கலங்கேன்;
செருப்பறுந்து போனதற்கோ சிந்திப்பான்!
நெருப்பினில் வீழ்ந்து
எதிர் நீச்சல் அடிக்கத் துணிந்தான்;
கொதிக்கும் தார் குளிர் நீர்!
அவனே தமிழன்,

"தாயால் பிறந்தேன்
தமிழால் வளர்ந்தேன்
நாயே நேற்றுன்னை
நடுவீதியில் சந்தித்தேன்
நீ யார் என்னை நில்லென்று சொல்வதற்கு"

கோலத் தினைப்புனத்தில்
ஆலோலம் பாடிய
கோதை வள்ளிக் காதலா,
சாதித் தடை கடந்த வேலய்யா
ஆறுமுகத் தோடும்,
ஈராறு கரத்தோடும்,
ஆடும் மயிலோடும்,
அணிவெல்லும் வேலோடும்,
மாறாதுணை வந்து வணங்கும்
மனிதர் தமிழரையா தமிழர்...

Tuesday, March 07, 2006

க கா பே

க கா பே இது தான் எனது தலைப்பு?

நிறைய யோசித்து எழுதுபவர் இங்கு இருக்க
பல வலையத் தளையதில் மற்றும் ஏட்டில் படித்து
தன் வழியில் எழுதுவோர் குழுமி இருக்க
சிலர் செய்யும் வேலை என்ன தெரியுமா?
வெட்டி ஒட்டுவது வேறு இடத்தில் இருந்து அதுவும்
100 பதிவு என மார்தட்டுவது.
அந்த வழியில் நானும் ஒரு விளையாட்டு விளையாட வருகிறேன் இப்போ...

அதுதான் க கா பே அதுசரி இது என்ன தலைப்பு?

க கா பே = CUT COPY PASTE

நாத்து அலங்காரமா

நாத்து அலங்காரமா
நாத்து முடி சிங்காரமா
நடவு நடும் பெண்களுக்கு
நடவழகு ஒப்பாரமா
ஏரு அலங்காரமா
ஏரு மாடு சிங்காரமா
ஏரு ஓட்டும் பையனுக்கு
தாரு குச்சி ஒப்பாரமா
வரப்பு அலங்காரமா
வரப்புகளும் சிங்காரமா
வரப்பு வெட்டும் பையனுக்கு
வட்டப் பொட்டு சிங்காரமா

கூந்தல் அழகியடி
கோது கொண்டை காரியடி
உருண்ட முழியழகி
குண்டுமணி கண்ணழகி
வண்டி அலங்காரமா
வண்டி மாடு சிங்காரமா
வண்டி ஓட்டும் பையனுக்கு
சாட்டை குச்சி ஒப்பாரமா
நாழு முழ ஓரத்திலே
வரப்பு வெட்டும் சின்னபையா
வரப்பு வெட்டும் பையனுக்கு
கோமணத்தான் ஒப்பாரமா
வரப்பு அலங்காரமா
மம்பட்டியும் ஒப்பாரமா
வரப்பு வெட்டும் பையனுக்கு
கோணவாக்கு ஒப்பாரமா

Sunday, March 05, 2006

"அன்பு" என்னப்படுவது

அன்பை வளர்த்திடுவாய்...மெய்
யன்பை வளர்த்திடுவாய்

கூடப் பிறந்த குழந்தை யிடத்தினில்
கொஞ்சுதல் அன்பாலே! உற
வாடி அம்மாவை மகிழ்ந்த மகிழ்ச்சியும்
அன்பின் திறத்தாலே!

தேடிய அப்பத்தில் கொஞ்சத்தை இன்னொரு
சின்னவனுக்குத் தர...நீ
ஓடுவ துண்டெனில் கண்டிருப்பாய் உன்
உள்ளத்திருந்த அன்பை!

கன்றையும் ஆவையும் ஒன்றாய் இணைத்தது
கருதில் அன்பன்றோ?

உன்னையும் உன்னரும் தோழர்கள் தம்மையும்
ஒட்டிய தன்பன்றோ?

சென்னையி னின்றொரு பேர்வழி வந்ததும்
சிட்டுப் பறந்ததுபோல்...நீ
முன்னுற ஓடஉன் உள்ளம் பறந்ததும்
முற்றிலும் அன்பன்றோ?

"சினம்" அதை அடக்கு

சினத்தை யடக்குதல் வேண்டும்...சினம்
உனக்கே கெடுதியைத் தூண்டும்!

சினத்தினை யடக்கிட முடியுமா என்று
செப்புகின்றாய் எனில்கேள் இதை நன்று

வலிவுள்ளவன் என்று கண்டு...சினம்
வாராமலே யடக்கல் உண்டு;
வலிவிலான்மேல் அன்பு கொண்டு...அதை
மாற்றாதான் பெரிய மண்டு!
நலியும் மொழிகளைப் பேசவும் சொல்லும்
நாக்கையும் பல்லால் நறுக்கவும் சொல்லும்

சினத்தை யடக்குதல் வேண்டும்!

அடங்கா வெகுளிமண் மேலே...காட்
டாறுபோய்ச் சீறுதல் போலே,
தொடர்ந்தின்னல் செய்யுமதனாலே...அதைத்
தோன்றாமலே செய்உன் பாலே!
கடிதில் சுடுமிரும்பைத் தூக்கவும் வைக்கும்
கண்ணாடி மேசையைத் தூளாய் உடைக்கும்

சினத்தை யடக்குதல் வேண்டும்!

"அறிவுள்ள திராவிடர் நாட்டில்"

உயர்வென்று கொட்டுக முரசே...நல்ல
உண்மைத் தமிழர்கள் வாழ்வு!
அயர்வில்லை அச்சமிங் கில்லை...புவி
ஆளப் பிறந்தவன் தமிழன்.

உயர்வென்று கொட்டுக முரசே!

அயல் என்று கொட்டுக முரசே!...உற
வான திராவிடர் அல்லார்!
துயர் செய்ய எண்ணிடும் பகைவர்...திறம்
தூள் என்று கொட்டுக முரசே!

உயர்வென்று கொட்டுக முரசே!

அறிவுள்ள திராவிடர் நாட்டில்...சற்றும்
ஆண்மை யில்லாதவர் வந்து
நமர்பசி கொள்ள நம்சோற்றை...உண்ண
நாக்கைக் குழைப்ப துணர்ந்தோம்.

உயர்வென்று கொட்டுக முரசே!

தமிழ்நாடு தமிழருக் கென்றே...இந்தச்
சகத்தில் முழக்கிடு முரசே!
நமைவென்ற நாட்டினர் இல்லை...இதை
நாற்றிசை முற்றும் முழக்கு!

உயர்வென்று கொட்டுக முரசே!